ஆரியர் திராவிடர் போரில் அதிகம் அடிவாங்கியது தமிழர்கள்தானே!
பெப்ரவரி 20th, 2011 § கருத்துத் தெரிவிக்கவும்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு பிறகு தமிழக மேடைகள் தோறும் ஆரியர் திராவிடர் போர் என்ற அக்கப்போர் அறிக்கை போர் நடந்து கொண்டிருக்கிறது. இனமான தலைவர்கள் “ஐயோ இது ஆரியர்கள் நமக்கு எதிராக தொடுத்த யுத்தம் அல்லவா? திராவிடா நீ உறக்கம் கொள்ளலாமா எழுந்திடு போராடு சீராடு ” என்று எங்கிருந்தோ வந்த நிதியில் எங்கெங்கும் கூவி கொண்டிருக்கின்றனர். இந்த ஆரிய திராவிட போர் நீண்ட நெடிய வரலாறு உடையது. போரின் துவக்கம் முதல் இன்றுவரை திராவிடர்களின் பிரதிநிதி ‘ஒன் அண்டு ஒன்லி’ தமிழர்களே.
திராவிடர் என்ற வார்த்தை தந்தை பெரியாரால் பார்ப்பனரல்லாதோர் சமூக மற்றும் அரசியல் நலன்களை குறிக்க பயன்பட்டு இன்று தமிழ்நாட்டின் தமிழரல்லாதோர் அரசியல் நலன்களை பாதுகாப்பது என்ற அளவில் குறுகி இருக்கிறது. பெரியார் வகுத்த சுயமரியாதை , பெண்விடுதலை சமூகநீதி , மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற பகுத்தறிவு கருத்துகளின் தொகுப்பாகவே திராவிடம் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தினோம். ஆனால் திராவிடம் என்றால் தமிழரல்லாத திராவிடனே ஒன்று சேர் என்றளவில் இன்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. திராவிட அரசியல் என்பது தமிழரல்லாதோர் தலைமை ஏற்கவும் தமிழன் மாத்திரம் தொண்டனாக கொடி பிடிக்கவும் உண்டாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. திராவிட கட்சிகளின் தலைமை தமிழரல்லாதோர் என்று நீங்கள் சுட்டி காட்டினால் நீங்கள் சாதி வெறியர் என்று குற்றம் சாட்டப்படுவீர். தமிழகத்தில் சாதியை கட்டிக்காப்பதும் ஒருவகையில் தாழ்த்தப்பட்டோர் ஓரணியில் திரண்டுவிடாமல் காப்பதுமே திராவிட கட்சிகளின் முக்கிய கடமையாக இருக்கிறது. உங்களுக்கு இதில் சந்தேகமிருந்தால் திராவிட கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை சாதிவாரியாக கணக்கெடுத்து பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக தென்மாவட்டங்களில் திராவிட கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் யாரென்று பார்த்தாலே உங்களுக்கு உண்மை விளங்கும்.
திருச்சியில் ரெட்டியார் சங்கம் கூட்டிய கூட்டம் ஒன்றில் பேசுகையில் திமுக அமைச்சர் கே.என் நேரு இப்படி கூறுகிறார் ” தமிழ்நாட்டில் இருக்கும் ரெட்டி வகுப்பை சேர்ந்தவர்கள் பிற சாதிக்காரர்களுக்கு வாக்களிக்க கூடாது. தமிழ் நாட்டின் முக்குலத்தோர் போன்று பிரச்சனைகள் என்று வரும்பொழுது தெலுங்கு பேசும் ரெட்டிகள் நாயுடுகள் இணைந்து செயல்பட வேண்டும் (அருந்ததியர்கள் அமைச்சரின் தெலுங்கு பேசும் பட்டியலில் இல்லை) . சாதி சங்க கூட்டத்தில் பங்கேற்பதே தவறு என்ற (பெரியாரின்) திராவிட கொள்கைகள் இன்று தெலுங்கு பேசும் மக்கள் தெலுங்கு பேசும் அரசியல்வாதிக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சரே கூறும் அளவிற்கு வந்திருகிறது. ஒருவேளை ரெட்டி நாயுடு எல்லாம் திராவிடர்கள்தானே என்றால் அருந்ததியர்கள் தவிர்க்கப்பட்டது ஏன்? சரி நாம் ஆரியர் திராவிடர் போர் குறித்து பார்ப்போம். …
ஆரியர்களின் பிரதிநிதியாக பார்பனர்களை (பிராமணர்களை) இங்கே நாம் அடையாளம் காணுகிறோம். ஆரியர் திராவிடர் போரில் ஆரியர்களின் முக்கிய தளபதிகளாக இந்து ராம் சுப்பிரமணிய சுவாமி சோ போன்றவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். இவர்களின் தாக்குதல்களால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது ஈழப்போராட்டமும் ஈழத்தமிழர்களும் என்று உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். இம்மும்மூர்த்திகள் இன்றுவரை ராசபக்சேவின் ஊதுகுழலாக இருந்துவருவதை அவர்களின் செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. முள்வேலி முகாம்கள் அருமை என்றும் சிங்கள அரசு தமிழர்களுக்கு உரிய நிவாரணங்களை அருமையாக செய்துவருகிறது என்றும் மூவருமே தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் முழங்கி வருகிறார்கள். மேலும் இம்மூவருமே அதிமுக தலைவிக்கு பெரியளவில் எதிரிகள் இல்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்.
தமிழ மீனவர்கள் தொடர்ச்சியாக சிங்கள இனவெறி படையால் சுடப்பட்டு ஐநூத்தி சொச்சம் தமிழக மீனவர்கள் உயிரிழந்திருந்தாலும் மீனவர் படுகொலை பெரியளவில் வெளியே தெரியாத வண்ணம் ஊடக கடமையை ஆற்றி கொண்டிருப்பவர் சிங்கள ரத்னாவான இந்து ராம் அவர்களே. இது போன்ற பிரச்சனைகளை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வதென்று ராசபக்செவிற்கு பாடம் எடுத்து கொண்டிருப்பவரும் சாட்சாத் இந்து ராம் அவர்கள்தான்.

தமிழர்கள் கண்ணில் மண்ணைப்போடுவது என்றால் ஆரியர் திராவிடர் கூட்டு அரங்கேற்றப்படும். அதற்கு பல்வேறு உதாரணங்களும் உண்டு. முல்லிவாய்கால் சோகத்தின் போது இத்தாலி தாயின் பெரு விருப்பிற்கு பங்கம் வந்துவிடாதபடி திராவிடர்களின் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி ஆற்றிய சேவையை உலகத்தமிழர்கள் ஒருங்கிணைந்த குரலில் கண்டித்த பொழுது செம்மொழி மாநாடு என்ற நாடகம் மிகப்பெரிய பொருட்செலவில் நடந்தேறியது. இந்த நாடகத்தினை சிறப்பாக நடத்தி முடித்திட கருணாநிதி நாடியது இந்து ராம் போன்ற ஆரிய அம்பிகளைத்தான்.
இன்றைய தேதியில் திராவிடர்களின் முக்கிய எதிரியாக கருத்தப்படுவது சுப்பிரமணியசுவாமிதான். ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்கு பிறகு சுப்புரமணிசாமி மீது கடுமையான கோபத்தில் திராவிடப்படைகள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இதே சுப்பிரமணிய சுவாமி மீது அழுகிய முட்டைகளை வீசிய உயர்நீதி மன்ற வழக்குரைஞர்களை நையப்புடைந்தது காவல்துறை. நீதி மன்ற வளாகத்துக்குள்ளேயே சென்று சுப்பிரமணியசுவாமி மீது வீசப்பட்ட முட்டைகளுக்கு நியாயம் கேட்டு தடியடி நடத்தியது திராவிடர்களின் ‘ஒன் அன்டு ஒன்லி’ தலைவர் கருணாநிதியின் காவல்துறை. நீதிமன்ற புறக்கணிப்பில் இருந்த வழக்குரைஞர்கள் ஈழத்தில் சிங்களர்கள் இந்தியாவின் துணையுடன் நிகழ்த்திய கொடும்போரை நிறுத்திட கோரி நிகழ்த்திய போராட்டாங்களை நீர்த்து போக செய்வதற்கு சுப்புரமணிய சுவாமி அப்பொழுது கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தார். வழக்கறிஞர்களின் போராட்டமும் திட்டமிட்டு நசுக்கப்பட்டது.
ஈழத்தமிழர்கள் அங்கே அடிவாங்குகிறார்கள் என்று யாராவது போராடினால் போராடியவர்கள் இங்கும் அடிவாங்குவார்கள்.சில தலைவர்களின் நலன்களை பாதுகாக்க மாத்திரமே திராவிடம் என்ற வார்த்தை இன்றைய தேதியில் பயன்படுகிறது. திராவிடர் கழகம் இந்த தேர்தலில் திமுக தலைமை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. காங்கிரசை எதிர்ப்பதைகூட வீரமணியின் திராவிடர் கழகம் கசப்போடுதான் பார்த்துகொண்டிருக்கும். திராவிடர் கழகத்தின் ஒரே தலையாய பணி மீண்டும் கருணாநிதியை ஆட்சிக்கட்டில் அமர்த்துவது அதன்மூலம் சில பலன்களை அடைவது.
ஆரியர் திராவிடர் போரில் எப்பொழுது ஒருவர் சமூகநீதி காத்த வீராங்கனை ஆவார் எப்பொழுது ஆரிய மாயையாவார் என்பதெல்லாம் வீரமணி போன்ற பெருந்தலைகளுக்கு மாத்திரமே வெளிச்சம். இந்த தேர்தலில் ஆரியமாயை செயித்தாலும் பழைய சமூக நீதிகாத்த வீராங்கனை என்ற பல்லவியை பாடுவது எப்படி என்பதில் வீரமணி தெளிவாக இருப்பார்.
ஆகவே தமிழர்களே இவர்கள் ஆரிய திராவிட போர் என்று அழைக்கிறார்கள் என்று வழக்கம் போல நம்பிவிடாதீர்கள் இவர்கள் தேவைக்கு தமிழர்கள் வேண்டும். இவர்கள் மோதி கொண்டாலும் நெருங்கி நின்றாலும் பாதிக்கப்படப்போவது தமிழர்கள் மட்டும்தான்.
